Tuesday, January 1, 2008

சேதுவா? ராமரா?

தற்போது இந்திய அரசியலில் உருவெடுத்திருக்கும் மிகப்பெரும் பிரச்சினை “சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்” நிறைவேற்றப்படுமா? என்பதுதான். மதவெறி பிடித்த அமைப்புகளும், அரசியலில் சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் கும்பல்களும் இணைந்து இல்லாத இராமர் பாலத்திற்காக இந்தியாவில் ஆங்காங்கே வன்முறைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
சேது சமுத்திரத்திட்டத்தில் ஒரு பகுதியில் அகற்றப்படும் சுண்ணாம்புப் பாறைகள் ராமர் கட்டிய பாலம் என்றும் அதை தேசியச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் கருத்துக்களை வைக்கின்றனர். இத்திட்டம் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. சேது சமுத்திரத் திட்டம் என்பது என்ன? அதன் மூலம் ஏற்படப் போகும் பயன்கள் என்ன? அதற்கு தடையாக இருப்பவர்கள் யார்? என்பது பற்றிய சிறிய பார்வையே இக்கட்டுரை.
சேது சமுத்திரத் திட்டம்வங்கக்கடலில் அமைந்துள்ள துறைமுகங்களுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கையைச் சுற்றிதான் வருகின்றன. காரணம் இந்தியா மற்றும் இலங்கைக்கு நடுவில் அமைந்துள்ள கடல்பகுதியின் ஆழம் குறைவு என்பதே ஆகும். இப்பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம். இத்திட்டம் நிறைவேறும் பொழுது கப்பல்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.
இத்திட்டம் 300 மீ அகலமும், 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக செயல்படுத்தப்படுகிறது.
ராமர் பாலம்(?) 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ ஆழப்படுத்தப்படமாட்டாது. 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாய் வழி அனுமதிக்கப்படும். கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும். 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவு கொண்ட கப்பல்கள் வரை இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.
இதற்கான திட்டப்பணிகள் துவங்கி கடல் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இக் கடலில் அமைந்துள்ள சுண்ணாம்புப் பாறைகளை ராமர் கட்டிய பாலம் என்று சங் அமைப்புகளும், பா.ஜா.கவினரும் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன.திட்டத்தின் வரலாறு
1860- இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது. 1922- துறைமுகப் பொறியாளராக இருந்த சர்.ராபர்ட் ப்ரிஸ்ட்டோ திட்டத்தைப் பரிந்துரை செய்கிறார். 1955- ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார் தலைமையிலான “சேது சமுத்திரத் திட்டக் குழு” 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது. 1983- இந்திரா காந்தி நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது. ஜூலை 2, 2005 - திட்டப்பணிகள் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப்படுகிறது.
பயன்கள்இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் தூரம் வரை குறையும். கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைய வாய்ப்பு. கணிசமான எரிபொருள் சேமிப்பு, அந்நியச் செலாவணி சேமிப்பு. கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு. இந்தியக் கடற்படையின் திறன் மேம்படும். கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும். தூத்துக்குடி துறைமுகமும், தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.
எதிர்ப்புகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிப் போதிய ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு. அரியவகை கடல் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம். ஆழிப்பேரலைகள் உருவாகும் பட்சத்தில் தாக்கம் அதிமாக இருக்கக்கூடும் என்கிற அபாயம். மீனினங்கள் இடம் பெயரும் என்கிற அபாயம். மீன்பிடிப்பு பகுதி குறையக்கூடும் என்ற மீனவர்களின் அச்சம். தோண்டப்படும் மணல் அப்புறப்படுத்தப்படுவது பற்றிய ஐயங்கள்.
ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் பயன்படுத்த முடியாது என்பதால் பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலன் கிட்டுமா என்ற ஐயம். இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால் முக்கியமாக பெரிதுபடுத்தப்படுவது இராமர் பாலமே?
இராமர் பாலம்?மணல், பாறைகளால் ஆன குறுகிய பாலம் இலங்கை மன்னார் தீவையும், இந்தியாவில் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கிறது. கடல் அடியில் பாறைகளின் மேல் அமைந்துள்ள மணல் திட்டுகள், நகரும் தன்மையுடவையாக இருந்தபோதும் இடையே அமைந்துள்ள சிறிய கால்வாய்கள் மணல் திட்டுகளை இணைக்கிறது. இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் இக்கடற்பாறைகள் ராமர் பாலம் மற்றும் ஆதாம் பாலம் என்று அழைக்கப்படுகிறது. 1480ல் ஏற்பட்ட கடும் புயலால் இடையில் கடல் நீர் புகுந்து கடல் நீருக்கு மேலும், கடலுக்கு கீழுமாக இப்பாலம் அமைந்துவிட்டது. இப்பகுதியில் கடல் மட்டத்தின் ஆழம் அதிக பட்சம் நான்கு அடிதான். ராமேஸ்வரத்திலிருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த பாலம் போன்ற அமைந்துள்ள சுண்ணாம்புக் கற்கள்தான் தற்போது சேது சமுத்திரத் திட்டத்தில் மிகப்பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்க சென்ற ராமன், அனுமன் தலைமையில் கடலில் பாலம் அமைத்து சென்றதால் இப்பாலம் வடமொழியில் நளசேது என்றும், தமிழில் திருவனை, ஆதிசேது, ராமசேது என்றும் மற்றும் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்டதும் இராமனே இப்பாலத்தைத் தன்னுடைய வில் மூலம் அம்பெய்து அழித்துவிட்டாராம்.
இப்படிப்பட்ட கற்பனை கதாபாத்திரங்களுக்காக பல கோடி ரூபாய் இலாபம் தரக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதில் உண்ணிப்பாய் இருக்கின்றனர். பா.ஜா.க மற்றும் சங் கூட்டத்தினர்.
அண்மையில் ராமரைப் பற்றியும் ராமாயணத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்த தமிழக முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவதோடல்லாமல் கர்நாடகத்தில் வசித்து வரும் அவருடைய மகளின் வீட்டையும் தாக்கி வன்முறையை நிகழ்த்தியுள்ளனர் இந்த சங் கும்பல்கள்.
மதவெறி பிடித்த முன்னாள் பா.ஜா.க பாராளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் வேதாந்தி ராமாயணம் ஒரு கற்பனைக் கதை அதில் ராமர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கருத்து தெரிவித்த தமிழக முதல்வரின் தலையைக் கொண்டுவருபவருக்கும், அவரின் நாக்கை அறுப்பவருக்கும் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்ற கொலைவெறிபிடித்த கருத்துக்களைக் கூறினார். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே கடையடைப்புகள், கொடிக்கம்பங்கள் சாய்ப்பது, உண்ணாவிரதம், எதிர் கட்சியினரின் அலுவலகங்கள் தாக்கப்படுவது போன்ற பல அசம்பாவிதங்களை ஏற்படுத்தி மக்கள் மற்றும் அரசின் கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ராமர் பற்றிய கருத்துகளை இடம் பெற்றிருந்ததாலும், ராமர் பாலம் பற்றிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்களால் வட மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்துவிடும் என்ற பயத்தாலும் காங்கிரஸ் மேலிடம் காங்கிரஸ் தலைவர்களுக்கு சேது சமுத்திரம் மற்றும் ராமர் பாலம் பற்றிய கருத்துகளை யாரும் தெரிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
மதத்தைப் பயன்படுத்தியே மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடும் இத்தகைய அரசியல் மற்றும் மதவாதிகளின் மத்தியில் இவர்களது எதிர்ப்பையும் தாண்டி இந்த திட்டம் விரைவில் நிறைவடைந்து செயலுக்கு வரவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்ப் பார்ப்பு.

No comments: